சாதாரணதர பரீட்சைகள் இன்று ஆரம்பம்.


சாதாரணதர பரீட்சைகள் இன்று ஆரம்பம்.


கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (2021 ஆம் ஆண்டுக்கான) பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை (23.05.2022) ஆரம்பமாகவுள்ளன.

இன்று முதல் ஜூன் முதலாம் திகதி பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய பரீட்சைகள் 5 மாதங்கள் காலம் தாழ்த்தப்பட்டு அடுத்த வாரம் இடம்பெறவுள்ளன.

அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய இன்று பரீட்சைகள் ஆரம்பமாகி ஜூன் முதலாம் திகதி நிறைவடையும்.

இம்முறை பாடசாலை ஊடாக 4 இலட்சத்து 7 ஆயிரத்து 129 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

அதே போன்று ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 367 தனியார் பரீட்சாத்திகளும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

அதற்கமைய இம்முறை ஒட்டுமொத்தமாக 5 இலட்சத்து 17 ஆயிரத்து 496 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளர்.

இதற்காக நாடளாவிய ரீதியில் 3844 பரீட்சை நிலையங்களும் , 542 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

சகல பரீட்சாத்திகளுக்கும் அனுமதி அட்டைகள் வழங்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய தளத்திற்குள் பிரவேசித்து அவற்றை தரவிறக்கம் செய்து அச்சுப்பிரதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

பரீட்சைக்கான நேர அட்டவணை அனுமதி அட்டையுடனேயே இணைக்கப்பட்டிருக்கும். அதனை மாத்திரம் பின்பற்றுமாறும் , இணைய தளங்களில் வெளியிடப்படும் வெவ்வேறு நேர அட்டவணைகளை பின்பற்ற அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.

பரீட்சை வினாத்தாள்களை கொண்டு செல்லும் அதிகாரிகள் , மாணவர்களை வாகனங்களில் அழைத்துச் செல்லும் பெற்றோருக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதமரின் செயலாளர் மற்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்டோரிடம் உரிய வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சீரற்ற காலநிலை குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக பொலிஸார் மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்புக்கள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.

பரீட்சத்திகளின் நலனைக் கருத்திற் கொண்டு மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் என்பன உறுதியளித்துள்ளன.

அதே போன்று அலுவலக நேர புகையிரதங்களுக்கு மேலதிகமாக காலை வேலைகளில் மேலதிக புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது என்றார்.

Comments

Popular posts from this blog